திருவண்ணாமலை கோவிலில் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டானது, கோவிலின் கல்யாண மண்டப வாசல், மூன்றாம் பிரகாரத்தில் தரையில் காணப்படுகிறது. இது முதலாம் ராஜேந்திர சோழன் (1012 - 1044) காலத்தைச் சேர்ந்ததாகும்.
இதுகுறித்து திருவண்ணாமலையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியரும், திருவண்ணாமலை பாரம்பரிய பவுண்டேஷன் அமைப்பின் தலைவருமான பி.ராஜ் என்பவர் ஒன்இந்தியா- தமிழ் இணையதளத்திற்கு அனுப்பி வைத்துள்ள புகைப்படம் மற்றும் செய்தியில் கூறியிருப்பதாவது:
நான் சாப்ட்வேர் என்ஜீனியராக இருந்தாலும் கூட பழங்காலப் பொருட்கள், பாரம்பரிய இடங்கள் குறித்து அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டன். இதற்காக அடிக்கடி பல்வேறு இடங்களுக்கும் செல்வது வழக்கம். பீல்டு ஒர்க்கராகவும் உள்ளேன்.
சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலில் ஒரு கல்வெட்டை காண நேர்ந்தது. அது இதுவரை ஆவணமாக பதிவு செய்யப்படாத கல்வெட்டாகும்.
அதைப் பார்த்தபோது அது முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு என்று தெரிய வந்தது என்று அதில் குறிப்பிட்டுள்ளார் ராஜ்.
இந்த கல்வெட்டானது ஒரு தானம் குறித்த விவரத்தைத் தெரிவிக்கிறது. இத் துண்டு கல்வெட்டு ராஜேந்திர சோழன் என்று மட்டும் குறிப்பிடுகிறது. இது அவரது நேரடி தானமா அல்லது வேறு ஒருவருடையதா என்று தெரியவில்லை. என்றாலும் கோவில் நைவேத்தியத்திற்கு பொங்கல் வைக்க கொடுக்கப்பட்ட ஒரு தானம் என்று மட்டும் தெரிவதாக ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
தகவல்- பி. ராஜ் ([email protected])