தமிழகத்தில் பல இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில்- முட்டையில் இருந்து தானாக பொறிந்த கோழி குஞ்சு
சென்னை: அக்னி நட்சத்திரத்திற்கு ஈடாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி, சேலம், திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 96 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆந்திரா, ஓடிசாவில் அனல் காற்று வீசி வருகிறது. சாலைகளில் ஆம்லேட் போடும் அளவிற்கு வெயில் சுடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலூர் மாவட்டத்தில் 111 டிகிரி வரைக்கும் வெப்பம் பதிவானது. இந்நிலையில், இன்னும் வெப்பம் அதிகமாகும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஒடிசாவில் 119 டிகிரி
ஒடிசா மாவட்டத்தில் பல நகரங்களில் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. சில இடங்களில் 119 டிகிரி வரை வெயில் பதிவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் சுருண்டு விழுந்து பலியாகி வருகின்றனர்.

125 டிகிரி வெப்பம் பதிவாகும்
இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள சில மாவட்டங்களில் 125 டிகிரி ஃபார்ன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்று கூறியுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் அதிகரித்துள்ள வெப்பத்தால், மழைப்பொழிவு அதிகமுள்ள இடங்களில் வறட்சி ஏற்படும் எனவும், பாலைவனங்களில் மழைப்பொழிவு ஏற்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சமாளிங்க மக்களே
இதை சமாளிக்க மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், இளநீர், மோர், தர்பூசனி, பதநீர், கரும்புச்சாறு, கம்பங்கூழ் ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

4 நகரங்களில் 104 டிகிரி
தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி, சேலம், திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை
சென்னையில் 96 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது, திருவள்ளூர் 99, காஞ்சிபுரம் 97, மதுரை 101, வேலூர் 102, விருதுநகர் 102, திருநெல்வேலி 93, கன்னியாகுமாரி 93 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தானாக பொறிந்த கோழிக்குஞ்சு
கொளுத்தும் வெயிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே, கோழி அடை காக்காமல், முட்டையில் இருந்து, குஞ்சு வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் என்பவரின் வீட்டில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

அடை காக்கப்படாத முட்டை
அந்த கோழி, கடந்த, 15 தினங்களாக தொடர்ந்து முட்டையிட்டு வந்தது.அந்த முட்டைகளை, அபுபக்கர் சித்திக் தன் வீட்டில் உள்ள அலமாரியில் சேமித்து வந்துள்ளார். அலமாறியை திறந்த போது அந்த முட்டைகளில், ஒன்றிலிருந்து குஞ்சு வெளியில் வந்து கத்திக் கொண்டிருந்தது. இதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள், அந்த கோழி குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்












Click it and Unblock the Notifications