மீனவர் போட்ட வலையில் சிக்கியது 10ம் நூற்றாண்டு முருகன் சிலை… கன்னியாகுமரியில் பரபரப்பு
கடலில் மீன் பிடிக்க போட்ட வலையில் அரிய முருகன் சிலை சிக்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரி மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: மீனவர் வலையில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை முருகன் சிலை சிக்கியதால் அவர் திகைப்பில் உள்ளார்.
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த நான்கு மீனவர்கள் கட்டு மரத்தில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். லீ புரம் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, வலையில் நான்கரை அடி உயர உலோக சாமி சிலை சிக்கியது. உடனே சிலையை கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், இதுகுறித்து கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் விஏஓவுக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அழகப்பபுரம் விஏஓ ஜெயமணி, கன்னியாகுமரி ஆர்ஐ திவான் ஆகியோர் வந்து சிலையை மீட்டு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.
இந்தச் சிலை குறித்து அருங்காட்சியக காப்பாளர் சுந்தரவள்ளி கூறும் போது, இது 10ம் நூற்றாண்டை சேர்ந்த முருகன் பெருமான் சிலையாகும். முருக பெருமான் வலது மேல் கையில் வஜ்ராயுதமும், இடது மேல் கையில் சக்தியின் ஆயுதமும் உள்ளது. மேலும், முருக பெருமான் தலையில் நீண்ட கிர்தா மகுடம் உள்ளது. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகளில் ஆடைகள் முழங்கால் வரைக்கும் இருக்கும். இந்த சிலையிலும் அதுபோல் உள்ளது. இதேபோன்ற இன்னொரு சிலை சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது என்று தெரிவித்தார். இந்த அரிய வகை சிலை கிடைத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications