ஈஷா ஆசிரமத்திலுள்ள ஆதியோகி சிலைக்கு கின்னஸ் சான்றிதழ்! ஏன் தெரியுமா?
உலகின் மிக பிரம்மாண்ட சிலை என கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் உள்ள 112 அடி மார்பளவு ஆதியோகி சிலைக்கு கின்னஸ் விருது வழங்கியுள்ளது.
கோவை : ஈஷா யோகா மையத்தின் சார்பில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்ட 112 அடி ஆதியோகி சிலையை உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலையாக கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.
கோவை அருகே, வெள்ளியங்கிரியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இந்த மையம் ஏராளமானோருக்கு யோகக் கலையை பயிற்றுவித்து வருகிறது. வெள்ளியங்கிரி மலைச்சாரலில், அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, ஏராளமான வன விலங்குகள் உறையும் பிரத்தியேகமான வனப்பகுதிக்கு அருகில், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் மீது வனத்தை அழித்து கட்டிடங்கள் கட்டுவதாக பல்வேறு புகார்கள் உள்ளன.
இதே போன்று தான் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட 112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழாவின் போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மார்பளவு ஆதியோகி சிலை எழுர் மலைத்தள பாதுகாப்புக்குழுமத்தின் அனுமதியும், நகர் ஊரமைப்புத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் அனுமதியும் அவசியம் என்ற போதும் அனுமதி பெறாமலே சட்ட விதிகளை மீறிக் கட்டிடம் மற்றும் சிலை எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

வனம் அழிப்பு
வன உயிரினங்களின் வாழிடங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதால், வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து யானைகள் சேதங்களை விளைவிப்பதாகவும், ஈஷா கட்டிடங்களால் யானை - மனித மோதல்கள் அதிகரித்ததாகவும் ஊர் மக்கள் மற்ற்ம இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள அவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

சிலை திறப்பு
பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் சிலை திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிரவராத்திரியன்று இரவு பிரம்மாண்ட ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வருகை தந்து சிலையை திறந்து வைத்தார்.

சுற்றுலாத் தலம்
உலகிலேயே மிகப்பெரிய ஆதியோகி சிலை என்பதால் இதன் சிறப்பு கருதி, இந்த இடத்தை அதிகாரப்பூர்வ சுற்றுலா தலமாக, மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்தது.

கின்னஸில் இடம்
இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலையாக, ஆதியோகி சிலையை, கின்னஸ் நிறுவனம் கவுரவித்துள்ளதாக ஈஷா யோகா மையம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கின்னஸ் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 3 சிலைகள்
ஆதியோகி சிலைக்கு கிடைத்த அங்கீகாரத்தையடுத்து இதேபோன்று 112 அடி உயரத்தில், மூன்று சிலைகள் இந்தியாவின் இதர, மூன்று திசைகளிலும் அமைக்க திட்டமிட்டு வருவதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications