திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 12 பேர் தப்பி ஓட்டம்
திருச்சி: கீழ புலிவார்டு ரோட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து ஜன்னல் கம்பியை அறுத்து 12 பேர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கீழ புலிவார்டு ரோட்டில் தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு 18 வயதுக்கு கீழே குற்றச்செயல்களில் ஈடுபட்ட 31 சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சீர்திருத்தப்பள்ளியில் சிறை கண்காணிப்பாளராக மன்னார் என்பவர் உள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றார். இதையடுத்து செந்தில், ராஜா ஆகிய இரு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை எழுந்து ரோந்து பணியில் ஈடுபட்திருந்த காவலர்கள் முதல் தளத்தில் உள்ள ஜன்னலில் இருந்து மூன்று போர்வைகள் முடிச்சி பொட்டு கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மேலே சென்று பார்த்தபோது கழிவறையில் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு சிறுவர்கள் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, துணை கமிஷனர் சசிமோகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மரியவசந்தசந்துரு, தர்மா, மணிகண்டன், முருகன், கதிரவன், ஹரிஹரசுதன், திவாகர், முத்துமணி, நாகராஜ், ஆகாஸ், தினேஷ், சதீஸ்குமார் ஆகிய 12 சிறுவர்கள் தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.
இது குறித்து அந்தந்த மாவட்ட காவல் துறை அலுவலங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு தப்பித்து போன சிறுவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.