எஸ்.பியை மாத்தியும் கொலை குறையலை... தூத்துக்குடி வி.ஏ.ஓ வெட்டிக் கொலை...19 நாட்களில் 12 கொலை!
திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்குமயிலோடை கிராம நிர்வாக அதிகாரி முத்து, கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், அன்றாடம் இரண்டு அல்லது மூன்று கொலைகள் என்ற கணக்கில், கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகின்றன. கடந்த 19 நாட்களில் மட்டும் 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள கொக்கராயன் குறிச்சியின் அ.தி.மு.க., கிளைக் கழகச் செயலர் பிச்சையா என்பவர், மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு விட, அந்த பகுதியில் கலவரம் வெடித்திருக்கிறது.

வெளியூர்களில் இருந்து ஆட்களை கூட்டி வந்து, பிச்சையாவின் ஆதரவாளர்கள் ஊருக்குள் கலவரம் செய்ய, அந்தப் பகுதியே கலவரக்காடாகி இருக்கிறது.
ஊரின் மையப் பகுதியில் இருந்த காமராஜர் சிலையை உடைத்தெறிய, இரு ஜாதிகளுக்கு இடையேயான பிரச்னையாக மாறி இருக்கிறது. அ.தி.மு.க., பொது செயலர் என்ற முறையில்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பிச்சையாவின் மரணத்துக்கு இரங்கல் கடிதம் வெளியிட்டு, அதில் கொலையாளிகளை பிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்போம் என, சொல்லி இருக்கிறார்.
மணல் அள்ளும் பிரச்சினை
கொக்கராயன் குறிச்சி, தாமிரபரணி ஆற்று கரை ஓரத்தில் உள்ள ஒரு ஊர். தாமிரபரணி ஆற்றில் திருட்டு மணல் அள்ளி, நீர் வளத்தை குறைத்திருப்பது போல, இந்த பகுதியில் இருக்கும் மணலை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அள்ள விடவில்லை. குறிப்பாக, இந்த ஊரில் வாத்தியாராக இருந்த தேவசகாயம் என்பவர், தன் முயற்சியால், திருட்டு மணல் அள்ள விடாமல், வெகு காலமாக தடுத்து வந்தார்.
தேவசகாயம் கொலை
ஆனாலும், அவரையும் மீறி, அந்தப் பகுதியில் இருக்கும் ஆளுங்கட்சியினர் பிச்சையா தலைமையில், ஆற்றில் திருட்டு மணல் அள்ள முயன்றனர். அதை தேவசகாயம் தடுத்தார். இதனையடுத்து ஆறு மாதங்களுக்கு முன், தேவசகாயம், வெட்டிக் கொல்லப்பட்டார்.
பழிக்குப் பழி கொலை
தேவசகாயம் வெட்டிக் கொல்லப்பட்டதன் பின்னணியில், பிச்சையா இருக்கிறார் என அறிந்ததும், பிச்சையாவை கொலை செய்ய, ஆட்கள் தயாராகினர். திட்டம் போட்டு, கடந்த சில நாட்களுக்கு முன், பிச்சையா வெட்டிக் கொல்லப்பட்டார். தேவசகாயத்தின் பேரன்கள்தான், இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என, போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.
200 அரிவாள் வெட்டுக்ள்
கடந்த 2014 ஜூன் மாதம் முதல் 2015 பிப்ரவரி வரையிலான 9 மாதத்தில் மட்டும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 200க்கும் அதிகமானோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். 86 பேர் பலியாகி உள்ளனர். இதில் 32 பேர் சாதி மோதல் காரணமாகவே கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
19 நாட்களில் 12 படுகொலை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 19 நாட்களில் 12 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 25ம் தேதிக்கு பிறகு 12 கொலைகள் நடந்துள்ளன.
பிப்ரவரி 25ஆம் தேதி கூடங்குளம் அருகே நகைக்காக இசக்கியம்மாள் (44) 27ஆம் தேதி புதுக்கோட்டை அருகே இளங்கோவன் (56) என்பவர் கொலை செய்யப்பட்டனர். ‘
வெட்டிக்கொலை
மார்ச் 1ஆம் தேதி பாளை சாந்திநகர் மாஜி எஸ்ஐ ஆறுமுகம், 4ம் தேதி ஆலங்குளம் அருகே ரவுடி சுருட்டை முருகன், சங்கரன்கோவிலில் இளம்பெண் மணிமேகலை ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
5ஆம் தேதி வி.கே.புரம் அருகே கூலிதொழிலாளி ராமச்சந்திரன் (38), 6ம் தேதி வல்லநாடு மணக்கரையை சேர்ந்த வேளாண் கல்லூரி காவலாளி துரைபாண்டியன்(75).
அரசியல் கொலைகள்
7ஆம் தேதி சிவகிரி தேவிபட்டினம் பொன்னையா மனைவி மீனாட்சி(50), 9ஆம்தேதி நாங்குனேரியில் ஆடு மேய்க்கும் தொழிலாளி நல்லகண்ணு, 10ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் கொங்கராயகுறிச்சி அதிமுக கிளை செயலாளர் பிச்சையா, 13ஆம் தேதி கல்லூர் சங்கரன்திரடு இளையராஜா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
ஓட்டல் உரிமையாளர் கொலை
ஞாயிறன்று (15ஆம் தேதி) பாணாங்குளத்தில் ஓட்டல் உரிமையாளர் கொம்பையா 4 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இன்று காலையில் தெற்குமயிலோடை கிராம நிர்வாக அதிகாரி முத்து,காலையில் தொடர் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சாதி கொலைகள்
கடந்த 1995ல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி மோதல்கள் தீவிரமாக இருந்தது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டனர். அதனை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் வருவாய்துறையில் திறமை வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டதால் சாதி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் சாதி மோதல் உக்கிரமடைய தொடங்கியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சவால்
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.,யாக கண்ணப்பன் நியமிக்கப்பட்டார். அவர், அங்கு இருந்த வரையில், பெரிய அளவில் கொலை, கொள்ளை நடக்கவில்லை. ஆனால், இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி விட்டது. எல்லா துறை முக்கியப் பொறுப்பிலும், அந்த பகுதியில் மெஜாரிட்டியாக இருக்கும் ஜாதியை சேர்ந்தவரே நியமிக்கப்பட்டனர்.
மாறாத காட்சிகள்
அரசுக்கு உளவறிந்து தகவல் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளே, குறிப் பிட்ட ஜாதிகளை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவ்வப்போது நடப்பவைகள் குறித்த தகவல்களும் ஆட்சி மேலிடத்துக்கு சரிவர, செல்வதில்லை என்பது புகாராகும். இதனையடுத்து தற்போது நெல்லை, தூத்துக்குடியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் ஆனாலும் படுகொலை சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications