12 வயது சிறுவன் மூளைச்சாவு: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பறந்து வந்த இதயம்
சென்னை: ஆந்திராவில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த 12 வயது சிறுவனின் இதயம் தானம் அளிக்கப்பட்டது. விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொறுத்தப்பட்டது.
மூளைச்சாவடைந்த சிறுவனின் பெயர் பி.வைஷ்ணவ் என்பதாகும். இரு தினங்களுக்கு முன்னர் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிக்சை அளித்து பலனளிக்கவில்லை. சிறுவன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுவனின் உறவினர்கள், அவனது உடல் உறுப்புகளை தானம் தர முன்வந்தனர். சிறுவனின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்களை தானமாக கொடுத்தனர்.
இதனையடுத்து சிறுவனின் இதயம் ஆம்புலன்ஸ் மூலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. தனியார் மருத்துவமனையில் இருந்து ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற ஆம்புலன்ஸ் கிரீன் காரிடர் முறை மூலம் எந்த சிக்னலிலும் நிற்காமல் சில நிமிடங்களில் சென்றடைந்தது. இதே போல சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் இதயம் பெறப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.