15,000 போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில்.... சென்னைக் கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்
சென்னை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்குப் பின் இன்று சென்னையில் கடலில் கரைக்கப்பட்டன. இதை முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கடந்த வியாழனன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பல விதமான பூஜைகளை மக்கள் மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று பின் கடலில் கரைப்பது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும், இந்த நிகழ்வை இந்து அமைப்புகள் கோலாகலமாக செய்து வருகின்றனர்.
2450 விநாயகர் சிலைகள்...
அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் 2,450 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றை இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்கள் கடலில் கரைத்தனர்.
ஊர்வலம்...
இந்த ஊர்வலத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சிலைகளை கரைக்கும் இடங்கள் குறித்தும் சென்னை போலீசார் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
விநாயகர் சதுர்த்தி...
இந்து முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, பாரத இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சென்னை மாநகரம் முழுவதும் 2,450 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, வழிப்பட்டு வந்தனர்.
கடலில் கரைக்க...
இவ்வாறு வைக்கப்பட்ட சிலைகளை இன்றுஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்து வருகின்றனர். இந்த விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட பாதைகள் வழியாக கடற்கரைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வடசென்னை...
வடசென்னையில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும், முத்துசாமி பாலம் அருகே ஒன்று சேர்ந்து, அங்கிருந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டு வருகிறது.
வள்ளுவர் கோட்ட சிலைகள்
வள்ளுவர்கோட்டத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை, வள்ளுவர்கோட்டம் அருகேயும், திருவல்லிக்கேணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், திருவட்டீஸ்வரன்பேட்டை அருகேயும் ஒன்று கூடி, அங்கிருந்து சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.