திமுகவினர் பயங்கர கோஷ்டி மோதல்.. விரட்டி விரட்டி நடு ரோட்டில் வெட்டிக் கொண்ட கொடூரம்!
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த திமுக உட்கட்சி தேர்தலின்போது பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் நடு ரோட்டில் விரட்டி விரட்டி ஒருவரை ஒருவர் அடித்தும், தாக்கியும், வெட்டியும் கொண்டனர். இதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
வாடிப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், பால்பாண்டி என்பவரை எதிர்த்து போட்டியிட்ட பால ராஜேந்திரன் என்பவர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள பால்பாண்டிக்குச் சொந்தமான டீக்கடையில், பால ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் டீ குடிக்க சென்றபோது உட்கட்சித் தேர்தல் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
கத்தி, கம்பு, உருட்டுக்கட்டை, கற்கள் என்று பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, சாலையில் இருதரப்பினரும் கடுமையாகப் மோதிக்கொண்டனர். இந்த மோதலால், அப்பகுதி வழியே சென்ற வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த மோதலில் 15பேர் படுகாயமடைந்தனர்.
திமுகவினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மோதலால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
இந்த பயங்கர மோதலில் பிரகாஷ், சிதம்பரம், பஞ்சு, ஜெயகாந்தன், சிவசுப்பிரமணி, பிரபாகரன், புதூர் ஸ்ரீதர், அழகுமணி உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர். மோதலைத் தொடர்ந்து வாடிப்பட்டி முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மோதலில் 2 கார், 5 மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
திமுகவினரின் இந்தக் கலவரம் காரணமாக பேருந்துகள் நான்கு வழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன.












Click it and Unblock the Notifications