கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல்
செங்கோட்டை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை ஆரியங்காவு சோதனை சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை காய்கறி மூட்டையில் பதுக்கி வேன் மூலம் எடுத்துச் சென்ற போது பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லைமாவட்டம் ஆலங்குளத்தை சார்ந்த மாடசாமி என்பவர் இன்றுகாலை லோடு ஆட்டோவில் செங்கோட்டை புளியரை வழியாக கேரளமாநிலத்திற்கு காய்கறி ஏற்றி அதனுள் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை ஏற்றிக்கொண்டு கேரளமாநிலம் ஆரியங்காவு அருகே சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது கேரளமாநில மதுவிலக்கு துறை போலீசார் அந்த வாகனத்தை மறித்து சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் மூட்டை..மூட்டையாக புகையிலை,பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்கள் இருப்பது கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். லோடு ஆட்டோ ஓட்டுநர் மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு புகையிலை பொருட்களை கடத்துவது தொடர்கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.