ஒரு மாதத்தில் அடுத்தடுத்து 15 கொலைகள் - பதற்றத்தில் நெல்லை
நெல்லை: நெல்லையில் தொடரும் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சாதாரண மக்களை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.
நெல்லையில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜாதி ரீதியிலான மோதல், பழிக்கு பழி என கொலைகள் நடக்கின்றன.
நாங்குநேரி அருகே உள்ள கராந்தனேரியை சேர்ந்த வேல்சாமி, கட்டிட தொழிலாளி. இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் வேல்சாமியை சரமாரியாக வெட்டினர். தொடர்ந்து வந்த கராந்தானேரியை சேர்ந்த கணேசன், மாரிக்கனி ஆகியோரும் சரமாரியாக வெட்டப்பட்டனர்.

மாரிக்கனி, பஞ்சாயத்து அலுவலகத்தில் காவலாளியாக உள்ளார். அடுத்தடுத்து வந்த மூவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்களில் வேல்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மாரிக்கனி தலைதுண்டித்து இறந்துகிடந்தார். கணேசன் சிகிச்சையில் உள்ளார்.
இவர்கள் மூவருமே எந்த சம்பவத்திலும் ஈடுபடாத அப்பாவிகள். எதற்காக இவர்கள் வெட்டப்பட்டவர்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
கரந்தானேரில் நடந்த கொலைகளால் நெல்லை-கன்னியாகுமரி தேசிய நான்குவழிச்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேரன்மகாதேவி சப்கலெக்டர் விஷ்ணு சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். கொலை குறித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் மறியலை கைவிட்டனர்.
இருப்பினும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறி வருவதால் போலீசாரின் தூக்கம் தொலைந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த ஓட்டல்தொழிலாளி சந்திரன் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
தென்காசியில் கட்டிட தொழிலாளி ராமச்சந்திரன் என்பவர் பழிக்கு பழியாக கொலைசெய்யப்பட்டார்.
இதே போல ஸ்ரீவைகுண்டம், கல்லிடைகுறிச்சி, ஆழ்வார்குறிச்சி என பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து பழிக்கு பழியாக கொலைகள் நடந்துள்ளன.
புளியங்குடியில் ஒரு அரசு பள்ளி மாணவன் சகமாணவனை கத்தியால் குத்திய சம்பவமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications