புதுசா யோசிக்கிறாங்களே.. "ஹவாலா" முறையில் ரூ.20 டோக்கன் விநியோகம்.. 15 பேர் கைது
ஹவாலா முறையில் ரூ. 20 நோட்டுகளை டோக்கனாக விநியோகித்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: ஹவாலா பாணியில் ஆர்கே நகருக்கு பணம் விநியோகம் செய்துள்ளதாக டிடிவி தினகரன் மீது பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் பகீர் புகார் அளித்துள்ள நிலையில் இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்கே நகருக்கு கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகாரினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் தேதி மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் இந்த தொகுதிக்குள்பட்ட வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியினர் ரூ. 2000 நோட்டுகளை ரூ.6000 வரை தருவதாக திமுக, பாஜக புகார் தெரிவித்தன. மேலும் குக்கர் சின்னம் பெற்ற தினகரனும் வீடு வீடாக குக்கர்களை விநியோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இன்று வாக்கு பதிவு தொடங்கியபோது, பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் பகீர் புகாரை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் டிடிவி தினகரன் அணியினர் ஹவாலா முறையில் ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்கின்றனர்.
ரூ.20 நோட்டுக்களை நேற்று முதல் கொடுத்து வருகின்றனர். இந்த நோட்டுகளில் உள்ள வரிசை எண்ணை ஒரு எண்ணுக்கு போன் செய்து கூறினால் அவர்களுக்கு ஒரு வோட்டுக்கு தலா ரூ. 6000 வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ரூ. 20 டோக்கன்களை விநியோகித்ததாக 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.