மது விற்பனைத் தடை... வேனில் கடத்தப்பட்ட 1500 மது பாட்டில்கள் பறிமுதல்
சென்னை: சென்னையில் போலீசார் நேற்று நடத்திய வாகனச் சோதனையில் வேனில் கடத்தப்பட்ட 1500 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
நாளை தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, நேற்று முதல் தேர்தல் நாளான நாளை வரை மூன்று நாட்களுக்கு மது விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. தடையை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.
விற்பனைத் தடை காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ரூ 150 கோடிக்கு மது விற்பனையானதாகச் சொல்லப் பட்டது. மதுவை யாரும் பதுக்கி விடாமல் இருப்பதற்காக போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னை கிழக்கு மதுவிலக்கு உதவி கமிஷனர் ஜெய்சுப்பிரமணியன் தலைமையில் போலீசார், ராஜா அண்ணாமலைபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்த வேன் ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் அதற்குள் 1500 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றை கடத்தி வந்ததாக முத்துராமலிங்கம் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கிறார்.
சென்னையில் ஏற்கனவே மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக கைது செய்யப்பட்ட ஜான்சி (45) என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications