மாநகராட்சியாகும் நாகர்கோவில்.. 18 ஊராட்சிகளை உள்ளிழுக்க திட்டம்!
நாகர்கோவில்: 1920ம் ஆண்டு முதல் நகராட்சியாக திகழ்ந்து வரும் நாகர்கோவிலை மாநகராட்சியாக்க 18 ஊராட்சிகளை நாகர்கோவிலுடன் இணைக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இப்போதுதான் இது நாகர்கோவில். 200 ஆண்டுகளுக்கு முன்பு இதன் பெயர் கோட்டார் என்பதாகும். தென் தமிழகத்தின் மிகப் பழமையான, பாரம்பரியம், வரலாற்றுப் பின்னணி கொண்ட நகரம் நாகர்கோவில்.
நாகர்கோவில் ஒரு அழகிய நகராகும். இதமான சீதோஷ்ணம், தண்ணீருக்குப் பஞ்சமில்ல்லாத ஊர் என்ற பல பெருமைகளைக் கொண்டது நாகர்கோவில்.

1920 முதல் நகராட்சி
1920ம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அன்று முதல் நகராட்சியாக அது செயல்பட்டு வருகிறது. 1947ம் ஆண்டு இது முதல் கிரேட் நகராட்சியாக விஸ்தரிக்கப்பட்டது.

1956ல் தமிழகத்துடன் இணைந்தது
1956ம் ஆண்டுக்கு முன்பு வரை இது திருவிதாங்கூர் மாகாணத்துடன் இணைந்திருந்தது நாகர்கோவில். 1956ம் ஆண்டு மொழி வழி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்துடன் இணைந்தது. 1988ம் ஆண்டு முதல் சிறப்பு கிரேட் நகராட்சியாக நாகர்கோவில் திகழ்ந்து வருகிறது.

மக்கள் தொகை 2 லட்சம்
நாகர்கோவில் நகரானது 24.27 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2 லட்சத்து 8 ஆயிரத்து 149 பேர் வசித்து வருகின்றனர் (தற்போது இது 3 லட்சமாக இருக்கலாம்). நாகர்கோவில், வடிவீஸ்வரம், வடசேரி, நீண்டகரை என நான்கு தாலுகாக்கள் நாகர்கோவில் நகராட்சியில் உள்ளன. தற்போது கிள்ளியூர் இதில் 5வது தாலுகாவாக இணையவுள்ளது. மொத்தம் 52 வார்டுகளைக் கொண்ட நகரம் நாகர்கோவில் நகராட்சி.

இணையும் 18 ஊராட்சிகள்
தற்போது நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியை தரம் உயர்த்த போதிய மக்கள் தொகை இல்லை. எனவே நாகர்கோவிலைச் சுற்றியுள்ள மணக்குடி, மேல சங்கரன்குழி, நல்லூர், திருப்பதி சாரம், தேரேகால், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், கணியாகுளம், பீமநகரி, பறக்கை, புத்தேரி, எள்ளுவிளை, மேலகிருஷ்ணன் புதூர், கேசவன்புத்தன்துறை, பள்ளம்துறை, தர்மபுரம், ராஜாக்கமங்கலம் துறை, ஆத்திகாட்டு விளை ஆகிய ஊராட்சிகளை நாகர்கோவிலுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications