இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் மாற்றிக் கொடுத்த மருத்துவமனை- சென்னையில் பரபரப்பு!
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் மாற்றி ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த மனோஜ் காசநோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தனர். உயிரிழந்த மனோஜின் உடலை, தவறாக மணிகண்டனின் உறவினர்களிடம் மருத்துவமனை அதிகாரிகள் வழங்கினர். இதனை அறியாத மணிகண்டனின் உறவினர்கள், மனோஜின் உடலை புதைத்துவிட்டனர்.
அதனால், அதிர்ச்சியடைந்த மனோஜின் உறவினர்கள், மனோஜின் உடலை மீட்டுக்கொடுக்க குரோம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து மேடவாக்கம் அருகே புதைக்கப்பட்ட மனோஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, பின் மனோஜின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது சம்பவம் குறித்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் விமலாவிடம் விளக்கம் கேட்ட போது, உடலை மாற்றிக்கொடுத்தது பிணவறை ஊழியரின் தவறு தான் என்றும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.