சார் எங்கப்பா வீட்டுக்கே வர்றதில்லை.. ஆக்ஷன் எடுங்க சார்.. போலீஸை அதிர வைத்த சிறார்கள்!
தந்தை மீது 2 மகன்கள் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.
Recommended Video
கோவை: போகிற போக்கை பார்த்தால் எல்லா பிரச்சனைகளையும் பள்ளி மாணவர்களே கையாள தொடங்கிவிடுவார்கள் போலிருக்கு.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏராளமானோர் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார் கொடுக்க வந்து செல்வது வழக்கம்தான். ஆனால் நேற்று புகார் கொடுக்க இரண்டு பேர் வந்திருந்தது உண்மையிலேயே வித்தியாசமாகவும், அதிர்ச்சி தரும்படியாகவும் இருந்தது. காரணம், புகாரளிக்க வந்தவர்கள் ப்ரத்யூம்னா என்ற 15 வயது சிறுவனும், ஹேமந்தரா என்ற 10 வயது சிறுவனும் ஆவர். இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பிகள். ஆனால் அதைவிட ஆச்சரியம் இவர்கள் யார் மேல் புகார் அளிக்க வந்தார்கள் என்பதில்தான்.
இருவருமே பெற்ற தந்தை மீதுதான் புகார் கொடுக்க வந்திருந்தனர். தந்தை என்ன பணி செய்கிறார் தெரியுமா? வால்பாறை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். புகார் என்னவென்றால், "போத்தனூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறோம். என் அப்பா இளங்கோ, வீட்டுக்கு அப்பா சரியாக வருவதில்லை, குடும்பத்தை கவனிப்பதில்லை, அடிப்படை தேவையை கூட செய்து கொடுப்பதில்லை. எங்க அப்பாவின் இந்த செயலால் எங்கள் மனம் மிகவும் புண்பட்டு பாதிப்படைந்துள்ளது. இந்த பிரச்சனையால் எங்களால் சரியாக படிக்க கூட முடியவில்லை" என்பதுதான்.
பிள்ளைகள் அளித்த புகாரின்படி, தந்தை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்காக சிறுவர்கள் போராட துவங்கிவிட்டார்கள் என பெருமைப்படுவதா, அல்லது பெத்த பிள்ளைகளே இப்படி புகார் கொடுக்கும் அளவுக்கு தந்தைமார்கள் நடந்து கொள்கிறார்களே என வேதனைப்படுவதா என தெரியவில்லை.
கடைசியாக ஒரு கொசுறு தகவல்... சிறுவர்களது அம்மா, அதாவது இளங்கோவின் மனைவி, பேரூர் பகுதியில் போலீஸாக பணியாற்றி வருகிறாராம். புகார் பற்றி இளங்கோவிடம் பேச முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அவரது செல்போனிலிருந்து எப்போதும் வரும் குரல் "நாட் ரீச்சபிள்"தான்!!