திருச்செந்தூர் கடலில் மண்ணில் இருந்து வெளியே வந்த 2 மனித எலும்புகூடுகள்! பக்தர்கள் அதிர்ச்சி!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடற்கரையில் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டை அங்கு குளிக்க வந்த பக்தர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர். அந்த மனித எலும்புக் கூடு யாருடையது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வருகிறது. கடலோரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. எனவே இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கடலில் அவ்வப்போது சில இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. கடல் நீரானது உள்வாங்குவதும் கடல் நீர் வெளியேறுவதும் அவ்வப்போது நடைபெறுகிறது.
சில நேரங்களில் கடலில் ஏற்படும் மாற்றங்களால் கடல் அரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் கடலுக்குள் இறங்க முடியாத சூழ்நிலை கூட ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அரசு குழு அமைத்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இன்று கடல் அலை சீற்றத்தால் கடற்கரையில் சுமார் இரண்டடி தூரம் மணல் அரிப்பு ஏற்பட்டது. இது பக்தர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த மணல் அரிப்பின் காரணமாக அந்த மணலுக்கு அடியில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் புதைந்த கிடந்தது வெளியே வந்தன.
மனிதனின் தலை, கை, மார்பு பகுதி, இடுப்பு கால் பகுதி என மனிதனின் முழு உருவ எலும்புக்கூடு இரண்டு காணப்பட்டது. திருச்செந்தூர் கோவிலில் இருந்து கடலுக்கு இறங்கும் பகுதியில் சுமார் 200 மீட்டர் தொலைவில் கிடந்த இந்த மனித எலும்புக் கூடுகளை கடலில் குளித்துக் கொண்டிருந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சில பக்தர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
கூட்டமாக பக்தர்கள் இந்த எலும்புக்கூடை பார்த்ததை கண்ட அங்கிருந்த கோவில் பணியாளர்கள் அந்த எலும்புக்கூடுகளை அதே இடத்தில் மணலால் மூடி விட்டனர். இந்த எலும்புக்கூடுகள் எப்படி இங்கே வந்தன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்து அந்த எலும்புக் கூடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடலில் சிக்கி இறந்தவர்களின் உடல் கிடைக்காமல் எலும்புக் கூடு மட்டும் மண்ணில் புதைந்து தற்போது வெளியே வருகிறதா இல்லை எங்கிருந்தாவது இந்த கூடுகள் அடித்து வரப்பட்டு மண்ணில் புதையுண்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக திருச்செந்தூர் கடலில் இருந்து சுவாமி சிலைகள், சிற்பங்கள் உள்ளிட்டவைதான் வெளியே தெரியும். இதை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எடுத்துச் செல்வர். அது போல் ஒரு முறை கடல் உள்வாங்கிய போது உடல் முழுவதும் திருநீறு அணிந்திருந்த சித்தர் ஒருவர் தியானம் செய்த காட்சியும் நடந்தது. இவரை பலர் புகைப்படமும் வீடியோவும் எடுத்தனர். யார் அவர், எங்கிருந்து வந்தார் என்பது தெரியவில்லை.
இதை பக்தர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். அது போல் அவ்வப்போது ஜெல்லி மீன்கள் வந்து குளிக்கும் பக்தர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்போது மட்டும் பக்தர்கள் கடலுக்குள் குளிக்க அனுமதி மறுக்கப்படும். திருச்செந்தூர் கடலில் ஒருமுறை முருகனின் சிலையும் வெளியே வந்தது. இதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து கந்தனுக்கு அரோகரா என முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications