எங்களை வெளியே விடுங்க..புதுவை ரிசார்ட்டில் தினகரன் கோஷ்டிக்கு எதிராக 2 பெண் எம்எல்ஏ-க்கள் ஸ்டிரைக்!
தங்களை விடுதியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள 2 பெண் எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
புதுவை: தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இரு பெண் எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக இணைப்புக்கு பின்னர், முதல்வருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்து தனித்தனியே கடிதங்களை கொடுத்தனர். இதன் பிறகு, அவர்கள் அனைவரும் கூவத்தூர் பாணியில் புதுவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இரு பெண்கள் எம்எல்ஏ-க்கள் தங்களை விடுதியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் , வீட்டுக்கு போக வேண்டும் என்றும் அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இன்று அவர்கள் விடுதியிலேயே உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியை ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் செய்து வருகிறார். எனினும் அவர்கள் சமாதானம் ஆகவில்லையாம். இந்தநிலையில் இன்று புதுவையில் தங்கியுள்ள எம்எல்ஏ-க்களை தினகரன் இன்று சந்திக்கிறார்.
தினகரனுக்கு எதிராக போராட்டம் நடத்திய புதுவை ஓம்சக்தி சேகர், விடுதியில் தங்கியுள்ள 2 பெண் எம்எல்ஏக்கள் ஒருங்கிணைந்த அதிமுகவில் இணையவுள்ளனர் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தி தினகரன் தரப்பினர் அடைத்து வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications