நானே நேரில் வருகிறேன்.. தூத்துக்குடி மதிமுக வேட்பாளரை உற்சாகப்படுத்திய அழகிரி
மதுரை: மு.க.அழகிரியை இன்று அவரது மதுரை வீட்டில் மதிமுக வேட்பாளர்கள் சதன் திருமலைக்குமார் மற்றும் ஜோயல் ஆகியோர் ஆதரவு கேட்டனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதலில் அழகிரி வீட்டுக்குப் போய் ஆதரவு கோரியிருந்தார். இதையடுத்து அவரது கட்சியின் தேனி வேட்பாளர் அழகுசுந்தரம் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டார்.
இந்த நிலையில், இன்று தென்காசி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தூத்துக்குடி வேட்பாளர் ஜோயல் ஆகியோரும் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரினர்.

வேட்பாளர் ஜோயலுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள மு.க.அழகிரி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிட தானே தூத்துக்குடி வருவதாக ஜோயலிடம் உறுதி அளித்துள்ளார்.
அத்துடன் விரைவில் தூத்துக்குடி வந்து தேர்தல் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதனால் வரும் நாட்களில் மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை தூத்துக்குடிக்கு நேரில் வந்து மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியினர் கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜோயல் பேசுகையில், ஆதரவு தருவதாக மு.க.அழகிரி உறுதியளித்துள்ளார். இது மகிழ்ச்சி தருகிறது என்றார்.
தூத்துக்குடியில் பெரியசாமி மகனை சந்திக்கிறார் ஜோயல். அதேபோல தென்காசியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக நிற்கிறார் சதன் திருமலைக்குமார் என்பது நினைவிருக்கலாம்.
ஏற்கனவே பாஜக வேட்பாளர் எச். ராஜாவும் அழகிரியைச் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications