சென்னையில் சரமாரி வெடிகுண்டு மிரட்டல்.. புரளி கிளப்பிய 2 பேர் கைது
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தால் மக்கள் அதிர்ந்தும், பயந்தும் போயுள்ள நிலையில் சற்றும் பொறுப்பில்லாமல், ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து புரளி கிளப்பிய 2 நபர்களைப் போலீஸார் துரிதமாக விசாரணை நடத்தி கண்டு பிடித்துக் கைது செய்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பி்ல பேசிய நபர், ஆவடி ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிக்கூடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான்.
இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆவடி ரயில் நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள பட்டாபிராம், அம்பத்தூர் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தினார்கள்.
மேலும் ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்த பரபரப்பு அடங்கும் முன்னர், இன்று காலையில் 2 முறை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம அழைப்புகள் வந்தன.
காலை 10 மணி அளவில் போன் செய்த மர்ம ஆசாமி ஒருவன், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் குண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டான். இதனால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். உடனடியாக வெடி குண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்ற போலீசார், எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை அவசரம் அவசரமாக வெளியேற்றினர்.
இதனால் ஆயிரக்கணக்கானோர் பதட்டத்துடன் வெளியில் வந்து எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தினுள் காத்திருந்தனர். மோப்ப நாய் உதவியுடன் அங்கு தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சமயத்தில், தி.நகர் முத்துரங்கன் சாலையில் உள்ள ஜெயின் பள்ளியில் குண்டு வைத்திருப்பதாகவும், கமிஷனர் அலுவலகத்துக்கு மிரட்டல் போன் வந்தது. உடனடியாக அங்கும் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கும் எதுவும் சிக்கவில்லை.
இந்த புரளிகளால் கொதிப்படைந்த போலீஸார் படு துரிதமாக செயல்பட்டனர். போன் செய்தவர்களைப் பிடிக்க உத்தரவுகள் பறந்தன. இதன் விளைவாக தற்போது 2 பேர் சிக்கியுளளனர். இதில் ஒருவன் பெண் குரலில் பேசியதும் தெரிய வந்துள்ளது. இருவரும் மீதும் கடும் பிரிவுகளில் வழக்குப் போட போலீஸார் திட்டமிட்டுள்ளனராம்.