பஸ் ஸ்டாண்டில் வைத்து சரமாரியாக அடித்துக் கொண்ட +2 மாணவர்கள்.. தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடியில், தனியார் பள்ளி மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. பஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பும் கடுமையாக மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 7 மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு பயிலும் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் முத்துராஜ் என்பவர் தலைமையில் ஒரு பிரிவினரும், தூத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் விஷால் என்பவர் தலைமையில் ஒரு பிரிவினரும் தனித்தனியாக செயல்பட்டு வந்துள்ளனர்.
இருதரப்பிற்கும் இடையே கடந்த சிலமாதங்களாக அவ்வப்போது மோதல் நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து பள்ளி தலைமையாசிரியர் மாணவர்களின் பெற்றோரை அழைத்து சமாதானமாக செல்ல அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் இருதரப்புற்கு இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வந்துள்ளது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒருதரப்பு மாணவர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாணவர்கள் இருதரப்பினரும் தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் வைத்து கடுமையாக மோதிக் கொண்டனர்.
இதையடுத்து விரைந்து வந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸார், மோதலில் ஈடுப்பட்ட பன்னிரென்டாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேரை கைது செய்தனர். மேலும் முத்துராஜின் நண்பர்கள் மற்றும் விஷாலின் நண்பர்கள் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அனைவரையும் தட்டப்பாறை சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications