சுற்றுலா வந்த 2 மாணவர்கள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலி
நெல்லை: பாபநாசம் கரையாறு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலியாகினர். சுற்றுலா வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் குருநாதன் மகன் பாண்டிகுமார். அங்குள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு
படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ராஜபாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர்களின் பெற்றோர் அங்குள்ள தீப்பெட்டி ஆலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

விடுமுறை என்பதால் தீப்பெட்டி ஆலைகளில் வேலை செய்யும பெண்கள் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சுற்றுலா வந்தனர். இவர்களுடன் பாண்டிகுமாரும், கிருஷ்ணனும் கோவிலுக்கு வந்தனர். மதியம் அனைவரும் அங்கு உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பாண்டிகுமார் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த கிருஷ்ணன் அவரை காப்பாற்ற முயன்றார். அவரும் சுழலில் சிக்கி தவித்தார். சிறிது நேரத்தில் பாண்டிகுமார் மூச்சு திணறி பலியானார்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டனர். பாண்டிகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதால் சடலமாக தான்
மீட்க முடிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் அம்பை தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிருஷ்ணனை அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிர் இழந்தார்.
கோவிலுக்கு வந்த இடத்தில் இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications