ஓடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்... விருதுநகர் அருகே பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் அருகே ஓடையில் ஆதார் அட்டைகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் ஆதார் அட்டைக்கு விவரங்களை பதிவு செய்த பலருக்கு இன்னும் ஆதார் அட்டை வராத நிலையே உள்ளது. இதனால் அவர்கள் தினசரி விருதுநகர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வி.முத்து லிங்காபுரம் பெரிய கண்மாய்க்கான வரத்துக்கால் வாயில் இருந்து பிரியும் ஓடையில் சில ஆதார் அட்டைகள் கிடப்பதாக அந்த கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஆதார் அட்டைகள் தண்ணீரில் நனைந்து சிதைந்த நிலையில் கிடந்தன.
இது பற்றி கிராம மக்கள் விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து வி.முத்துலிங்காபுரம் சென்று தள ஆய்வு செய்து ஓடையில் ஆதார் அட்டைகள் இருந்தால் அவற்றை கைப்பற்றி வரும்படி தாசில்தார் பால் துரை வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் கிராம நிர்வாக அதிகாரி வெண்ணிலாவும், வருவாய் ஆய்வாளரும் அங்கு சென்று கிராம மக்கள் புகார் சொன்ன இடத்தை நேரில் பார்த்தனர். அப்போது அங்கு 20 ஆதார் அட்டைகள் தண்ணீரில் நனைந்து சிதைந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வருவாய் அலுவலர்கள் அவற்றை கைப்பற்றி தாலுகா அலுவகத்தில் ஒப்படைத்தனர்.
ஆதார் அட்டை கிடைக்காமல் தாங்கள் தினசரி தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் நிலையில், கிராமத்தில் உள்ள சிலரது ஆதார் அட்டைகளை ஓடையில் வீசியது யார் என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராமத்தில் ஆதார் அட்டை கிடைக்காதவர்களுக்கு ஆதார் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக இருக்கும் நிலையில் அதனை ஓடையில் வீசிச் சென்றது அங்குள்ள பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.