இதுதாங்க எங்க முடிவு.... தனி ஆலோசனைக்கு பிறகு முதல்வரிடம் தெரிவித்த 20 அமைச்சர்கள்
தலைமைச் செயலகத்தில் 20 அமைச்சர்கள் தனித்து ஆலோசனை நடத்திய நிலையில் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தனர்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் 20 அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
இரட்டை இலை சின்னத்தைுக்கு லஞ்சம் அளித்த வழக்கில் வெளியே வந்த தினகரனுடன் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தோப்பு வெங்காடசலம், தங்கதமிழ்ச் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் கட்சித் தலைமைக்கு எதிராக பேசிய அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, வீரமணி உள்ளிட்டோரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஆலோசனையில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனிடையே ஜெயக்குமாரை தினகரன் விமர்சித்தது அமைச்சர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்திக்க சென்றுள்ளார். இச்சமயம் அமைச்சர் ஜெயகுமார் அறையில் 20 அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்தனர். எனவே இது அரசு திட்டங்கள் குறித்த முடிவுகளாக இருப்பதாக தெரியவில்லை. மேலும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த தினகரன் சென்றுள்ள நிலையில் 20 அமைச்சர்கள் இதுபோன்ற தனி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அதிமுகவில் மேலும் ஒரு அணி பிளவுப்பட வாய்ப்பிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை இல்லாததை வெளிப்படுத்தும் விதமாக தினகரன் அச்சுறுத்தி வருவதால் இதுபோன்ற ஆலோசனைகள் எடப்பாடியின் சம்மதத்தின் பேரிலேயே நடந்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications