கருத்துக்கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.. லயோலா ரிசர்ச் அசோசியேட் பீப்புள் பவுண்டேசன்
சென்னை: லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் கருத்துக்கணிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று என்று வழக்கமாக கணிப்பை வெளியிடும், 'ரிசர்ச் அசோசியேட் பீப்புள் பவுண்டேசன் கூறியுள்ளது.
2016 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்தது. இதில் திமுகவின் முதல்வர் வேட்பாளர்களாக ஸ்டாலினும், கருணாநிதியும் முன்னிறுத்தப்பட்டதில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார் கருணாநிதி. ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பின் பரபரப்பு திமுகவில் அடங்கும் முன்பாகவே மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

லயோலா முன்னாள் மாணவர்கள் பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசு சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்துகணிப்புகளை வெளியிட்டார். அப்பொழுது அவர் " தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் கிராமம், நகரம் என களப்பணியில் ஈடுபட்டு, மொத்தம் 5176 பேரிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தபட்டது.
அதில், 'தமிழகத்தில் பிரச்னைகளை தீர்க்கும் திறமையான கட்சியாக எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்?' என்ற மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தி.மு.க-விற்கு 33.9% மக்களும், அ.தி.மு.க விற்கு 31.5% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க விற்கு 8.%, தே.மு.தி.கவிற்கு 14.4% மக்களும், பா.ம.கவிற்கு 9.9% சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே போல் கடந்த நான்கு ஆண்டுகளில் அ.தி.மு.க அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்த கேள்விக்கு "நன்று என 32.5% மக்களும், சொல்வதற்கு ஏதும் இல்லை என 25.8% மக்களும், மோசம் என 39.3% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சி மோசம் என்றே பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க - தி.மு.கவிற்கு மாற்றாக பிற கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் திறமை கிடையாது என்று பெரும்பாலனவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக நேற்று வெளியானது.
ராஜநாயகம் தலைமையில்
லயோலா கல்லூரியில் பல விஷயங்களைப் பற்றி கருத்துக் கணிப்பு நடைபெற்றாலும் தேர்தல் கருத்துக் கணிப்புதான் பெரிய அளவில் பேசப்படுகிறது. பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மாணவர் குழுக்களே இந்தக் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு வந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டது இந்த குழு.
புதிய கருத்துக்கணிப்பு
இப்போது வெளியாகியுள்ள புதிய கருத்துக் கணிப்பு, முன்னாள் மாணவர்கள் குழு 'பண்பாட்டு மக்கள் தொடர்பகம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கருத்துக்கணிப்புதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
முதல்வர் வாய்ப்பு
நேற்று வெளியான கருத்துக் கணிப்பில் முதல்வராகும் வாய்ப்பில் முதலிடம் கருணாநிதி, இரண்டாமிடம் ஸ்டாலின், மூன்றாமிடம் ஜெயலலிதா என்றும் சொல்லியிருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ஊடகங்களில் வெளியிட்டனர் லயோலாவின் முன்னாள் மாணவர்கள் குழுவான பண்பாட்டு மக்கள் தொடர்பகத்தினர்.
இந் நிலையில் வழக்கமாக கணிப்பை வெளியிடும், 'ரிசர்ச் அசோசியேட் பீப்புள் பவுண்டேசன்' சார்பில், கார்த்திக் என்பவர் மீடியாக்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், இந்தக் கருத்துக் கணிப்பை செய்தது நாங்களல்ல என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications