தினகரன் கோஷ்டியில் 25 எம்.எல்.ஏக்கள்...எடப்பாடி ஆட்சி கவிழுவது உறுதி?
தினகரன் கோஷ்டியில் 25 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழும் என கூறப்படுகிறது,
சென்னை: அதிமுகவில் இருந்து தம்மை ஓரம்கட்டியிருப்பதால் தமது ஆதரவு 25 எம்.எல்.ஏக்கள் மூலமாக எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பதற்கான வியூகங்களை தினகரன் வகுத்துள்ளாராம்.
அதிமுகவின் சசிகலா கோஷ்டி தற்போது உடைந்து போயுள்ளது. சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக என்ற முழக்கத்தை அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி.
ஆனால் கூவத்தூர் ரிசார்ட் மூலமாக ஆட்சியையே தக்க வைத்த தம்மால் எடப்பாடி அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என குமுறிக் கொண்டிருக்கிறாராம் தினகரன். இதன் ஒருகட்டமாக எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரை மீடியாக்களிடம் தினகரன் பேச வைத்தார்.
இதற்கு பதிலடியாக சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக நாட்டாமை போல பேட்டி கொடுத்தார் அமைச்சர் ஜெயக்குமார். தங்களை ஓரம்கட்டிய இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்பதில் தற்போது தினகரன் தரப்பு தீவிரமாக உள்ளது.
தமக்கு ஆதரவாக உள்ள 25 எம்.எல்.ஏக்களை வைத்து எடப்பாடி அரசை கவிழ்க்கும் முயற்சிகளில் தினகரன் கோஷ்டி இறங்கியுள்ளது. வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் எம்.எல்.ஏக்களை வளைத்து போடும் முயற்சியில் தீவிரமாக உள்ளனராம்.