ஸ்ரீபெரும்புதூர்: பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த மூவர் கைது
சென்னை: சென்னையை அடுத்த ஸ்ரீ பெரும்புதூரில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரின் கணவன் - மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர், திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் மாலதி (வயது 13) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி பள்ளிக்குச் செல்லும் அதே பகுதியை சேர்ந்த சங்கர்கணேஷ் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்தார். இதனை மாலதி கண்டித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு மாலதி நடந்து வந்தார். அப்போது பின்னால் வந்த சங்கர் கணேஷ் தன்னிடம் பேசும் படி வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்டார்.
திடீரென அவர் மாலதியின் வாயை பொத்தி அருகில் உள்ள நண்பர் பவன்குமார் வீட்டுக்கு கடத்தி சென்றார். அங்கு மாலதிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதற்கு பவன்குமாரும் அவரது மனைவி தமயந்தியும் உடந்தையாக இருந்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய மாலதி இது பற்றி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் மகளிர் போலீசில் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் கணேஷ், பவன்குமார், அவரது மனைவி தமயந்தி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.