3 தொகுதிகளையும் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் தமிழகம் வருகை… ராஜேஷ் லக்கானி தகவல்
19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதிகளையும் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் இன்று மாலை தமிழகம் வர உள்ளனர்.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த 3 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் மூவரும் இன்று மாலை தமிழகம் வர உள்ளனர்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுக்கள் கடந்த 26ம் தேதியில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இன்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

இதனையடுத்து, தேர்தல் வேலைகள் இந்த 3 தொகுதிகளிலும், வேகம் எடுத்துள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செய்யும் செலவுகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதிக்கு உத்தரகாண்ட் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூபால் சிங்கும், தஞ்சை தொகுதிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷேக் அகமதுவும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி யு.வி. ஜோஸ்சும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் இன்று மாலை தமிழகத்திற்கு வர உள்ளனர் என்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த மே மாதம் 16ம் தேதி நடக்க வேண்டிய அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து ரத்து செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சீனிவேலு மரணம் அடைந்ததால் அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. இதனையடுத்து இந்த 3 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications