தக்காளி சட்டினி கேட்டது தப்பாய்யா?... 3 பேரைப் போட்டு புரட்டி எடுத்த புரோட்டா கடைக்காரர்கள்!
ஈரோடு: ஈரோட்டில் புரோட்டாவுக்குத் தொட்டுக் கொள்ள தக்காளி சட்டினி கேட்ட 3 பேரை புரோட்டா கடை ஊழியர்கள் போட்டு புரட்டி எடுத்து விட்டனர். இந்தக் கொலை வெறித் தாக்குதல் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு, சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான சம்பத் குமார். பர்னிச்சர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரும், இவரது நண்பர்கள் ரகுநாதன், பாலசுப்ரமணியன் ஆகியோர் பெருந்துறை சாலையில் உள்ள கொங்கு புரோட்டா ஸ்டால் என்ற ஹோட்டலுக்கு புரோட்டா சாப்பிடச் சென்றனர்.

புரோட்டா வைத்தவர்கள் தொட்டுக் கொள்ள தக்காளி சட்டினி வைக்கவில்லை போலும். இதனால் தக்காளி சட்டினியைக் கேட்டுள்ளனர் மூன்று பேரும். ஆனால் சட்டினி வந்தது போலத் தெரியவில்லை. இதனால் வாக்குவாதம் மூண்டது.
இதனால் கோபமடைந்த கடைக்காரர்களான புதுக்கோட்டை விவேக், புதுக்கோட்டை விஜயக்குமார், ராமநாதபுரம் ஆனந்த், ஈரோட்டைச் சேர்ந்த கோட்டைச்சாமி ஆகியோர் கடும் ஆத்திரத்துடன் சாப்பிட வந்த 3 பேர் மீதும் சரமாரியாகத் தாக்கினர்.
பூரிக் கட்டை, தோசைக் கரண்டி, கறி வெட்டும் கத்தி என கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அடித்து நொறுக்கினர். இதில் சம்பத்குமார் உள்ளிட்ட 3பேருக்கும் கடும் காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டியது. இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது.
போலீஸார் ஆம்புலன்ஸுடன் விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் தப்பி ஓடியவர்களைப் பிடிக்க வலை வீசியதில் விஜயக்குமார் தவிர மற்றவர்கள் சிக்கினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications