கோவை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - விசைத்தறி அதிபர் குடும்பத்தோடு பலி
கோவை: கோவை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், விசைத்தறி அதிபர், மனைவி, மகனுடன் பரிதாபமாகப் பலியானார்.
கோவை மாவட்டம் இஞ்சிப்பட்டி கருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (70). விசைத்தறி குடோன் வைத்துள்ள பழனிச்சாமி, விவசாயமும் செய்து வந்தார். அவருடைய மனைவி இந்திராணி (60), மகன் செந்தில்குமார் (40).
இந்நிலையில், பழனிச்சாமி தனது மனைவி மற்றும் மகனுடன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். காரை செந்தில்குமாரே ஓட்டிச் சென்றார்.
நேற்று காலை 7 மணியளவில் கார் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் மதுக்கரை முதலாவது சோதனைச் சாவடியை கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது மழை பெய்ததால், எதிரில் வந்த காரும், செந்தில்குமார் ஓட்டிச் சென்ற காரும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இதில் செந்தில் குமாரின் கார் தூக்கி வீசப்பட்டு சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில், கார் முற்றிலும் உருக்குலைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி, இந்திராணி, செந்தில்குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் எதிரே வந்த காரில் இருந்த கோவையை சேர்ந்த விக்னேஷ் (28), அனிஸ்குமார் (25), விஷ்ணுபிரசாத் (24), செல்வம் (25) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் பலியான பழனிச்சாமி, இந்திராணி, செந்தில்குமார் ஆகியோரின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.