எல்லை தாண்டி மீன் பிடித்தார்களாம் தமிழக மீனவர்கள்.. 3 பேரைக் கைது செய்து இலங்கை அட்டூழியம்!
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கோட்டைப்பட்டினம்: நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 3 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கம் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் கொண்டு சென்ற படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன், நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன், வீரையன், கண்ணையன், அண்ணாத்துரை , அமிர்தலிங்கம், குமரன், சித்ரவேல், மாரியப்பன் ஆகிய 8 மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.