சென்னை தொழிலதிபர் கொலை: சொத்துக்காக கொன்ற அக்காள் கணவர் உட்பட மூவர் கைது
சென்னை: ஏற்காடு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது அக்காள் கணவர் உள்பட மூவரை சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
சென்னை நீலாங்கரையைச் சேர்ந்தவர் செல்வவிநாயகம் (40). இவர் சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார். இவரது மனைவி வாணி. கடந்த டிசம்பர் மாதம் ஏற்காட்டுக்கு வந்த செல்வவிநாயகம் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, டிசம்பர் 28 ஆம் தேதி ஏற்காட்டில் உள்ள வழுக்குப்பாறையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், தனது கணவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், வழக்கை சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றக் கோரியும் அவரது மனைவி வாணி கோரிக்கை விடுத்தார். இதன்பேரில் வழக்கு சேலம் சிபிசிஐடிக்கு போலீஸார் விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.

தலைமறைவான உறவினர்
இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலங்கியது. செல்வவிநாயகத்தை அவரது அக்காள் கணவர் ராஜேந்திரன் கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜேந்திரன் தலைமறைவானார்.
இதையடுத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் ராஜேந்திரன், தனது உறவினர்களான லட்சுமணன், கருணாநிதி ஆகியோருடன் சேர்ந்து செல்வவிநாயகத்தை கொன்றது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
மூவர் கைது
இந்த நிலையில் சனிக்கிழமையன்று ராஜேந்திரன் (54), லட்சுமணன் (41), கருணாநிதி (45) ஆகிய 3 பேரையும் சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதில் லட்சுமணன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வருவதும், கருணாநிதி சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
சிறையில் அடைப்பு
கைதான ராஜேந்திரன், லட்சுமணன், கருணாநிதி ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் இரவு சேலம் 4வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சொத்துக்காக கொலை
செல்வவிநாயகத்தின் சொத்துக்காக அவரை உறவினர், கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட செல்வவிநாயகத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளது. இந்த சொத்துகளை அபகரிக்க அவரது அக்காள் கணவர் ராஜேந்திரன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்காடு கிளியூர் பகுதியில் உள்ள தனது எஸ்டேட்டிற்கு அவரை அழைத்து வந்து ஒரு நிலத்தை விற்பது தொடர்பாக பேசியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்படவே, செல்வவிநாயகத்தை, ராஜேந்திரன் மற்றும் அவருடன் இருந்த லட்சுமணன், கருணாநிதி ஆகியோர் அடித்துக் கொலை செய்து உள்ளனர்.
மூன்று மாதங்களுக்குப் பின்
பின்னர், வழுக்குப்பாறை பகுதியில் அவரது சடலத்தை போட்டு விட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பி உள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை தொழில் அதிபர் கொலை வழக்கில் 3 மாதத்திற்கு பின் மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications