ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற கார்... எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் பலி
நெல்லை: நெல்லை அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றது ஒரு கார். அப்போது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் கார் மீது மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டம் மருதவனம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி ராஜவதனம். இவர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் பாதியாராக உள்ளார். இவர் பேரின்பபுரம் என்ற ஊரில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு குடும்பத்தோடு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
காரில் 4 பெண்கள் இருந்தனர். வழியில் செங்குளம் என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஓன்று உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கார் வேகமாக கடக்க முயன்ற போது, நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் மோதியது.
இதில் காரில் இருந்த குளோரி, ஸ்தோத்திர ராணி மற்றும் ஞானமேரி ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்தில் பலியானார்கள். கென்னடி ராஜவதனம் மற்றும் ஜெபமேரி ஆகியோர் படுகாயமடைந்து பாளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தைத் தொடர்ந்த நிறுத்தப்பட்ட ரயில், 6.45 மணிக்கு மேல் புறப்பட்டுச் சென்றது.