முக்கோணச் சிக்கலில் சசிகலா.. முடக்கக் காத்திருக்கும் 3 முக்கிய வழக்குகள்!
சசிகலாவை 3 முக்கிய வழக்குகள் சூழ்ந்துள்ளன. அதில் ஒன்றுதான் சொத்துக் குவிப்பு வழக்கு.
சென்னை: சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு மட்டும்தான் பெரும் சவால் என்று நினைத்தால் அது தவறு. அதைத் தவிர மேலும் 2 முக்கிய வழக்குகளும் அவருக்கு பெரும் குடைச்சலாக இருந்து கொண்டுள்ளன. அதிலிருந்தும் அவர் மீண்டு வந்தாக வேண்டும்.
அதிமுக உடைந்து விட்டது. ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து கிடக்கின்றனர். ஆட்சி குலைந்து போய் விட்டது. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. மக்கள் நலப் பணிகள் முற்றிலும் முடங்கிப் போய் விட்டன. இந்த நிலையில் சசிகலாவின் தலையெழுத்தைப் பார்க்க தமிழகமே கூடி நிற்கிறது.
சசிகலாவின் விதியை நிர்ணயிக்கப் போகும் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று வருகிறது. அதேசமயம், அவர் மீதுள்ள வழக்குகள் குறித்த ஒரு பார்வை இதோ.

3 வழக்குகள்
சசிகலா மீது மொத்தம் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கு, ஃபெரா வழக்கு மற்றும் அன்னியச் செலாவணி மோசடி வழக்கு என மூன்று வழக்குகளில் அவர் இன்னும் வெளியே வராமல் உள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கு
ஜெயலலிதாவுடன் சேர்ந்து இந்த வழக்கை சந்தித்து வருகிறார் சசிகலா. நீண்ட நெடுங்காலம் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதன் தீர்ப்புதான் இன்று வெளியாகிறது.

ஃபெரா வழக்கு
கடந்த வாரம்தான் இந்த வழக்கிலிருந்து சசிகலாவை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து அதிரடி உத்தரவிட்டது. ஃபெரா சட்டத்தின் கீழ் கடந்த 1995 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் அமலாக்கப் பிரிவு மொத்தம் 3 வழக்குகளைப் பதிவு செய்தது. ஜேஜே டிவி தொடர்பான வழக்குகள் இவை. அப்போது சசிகலா தான் ஜேஜே டிவியின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம்
இன்னொரு முக்கிய வழக்கு மலேசியாவில் தனது பினாமி மூலமாக சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கு. இந்தப் பணத்தைக் கொண்டுதான் கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் இளவரசியும் சிக்கியுள்ளார். இந்த வழக்கிலிருந்து இவர்களை கடந்த 2015ம் ஆண்டு சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் கோர்ட் விடுதலை செய்தது. ஆனால் அமலாக்கப் பிரிவு ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தது. அதை விசாரித்த உயர்நீதி்மன்றம், விசாரணை தொடர வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த 3 சிக்கல்களிலிருந்தும் சசிகலா விடுபட்டால்தான் அவருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications