மீண்டும் அமைச்சர்களான கோகுல இந்திரா, வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவியேற்றனர்
சென்னை: தமிழக அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள கோகுல இந்திரா, வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று மாலை அமைச்சர்களாக பதவியேற்றனர்.

லோக்சபா தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றாலும் தேர்தல் பணியில் புகாருக்குள்ளானோர் மீது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. குறிப்பாக அதிமுக தோற்ற தொகுதிகள் கட்சி நிர்வாகிகளும் அத்தொகுதி அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் பாரதிய ஜனதா வென்றது. இதனால் அங்கு கட்சி நிர்வாகிகளை மட்டுமின்றி அமைச்சர் கே.டி. பச்சைமாலையும் அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டார் ஜெயலலிதா.
அதேபோல் தருமபுரி, புதுச்சேரி தொகுதிகளில் பாமக, என்.ஆர். காங்கிரஸ் வென்றது. அங்கும் கட்சி நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் ஜெயலலிதா.
அத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதற்காக கட்சி நிர்வாகிகள் நீக்கப்பட்டதுடன் அமைச்சர் ரமணாவும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். உடல்நலக் குறைவால் தேர்தல் பணியில் ஈடுபடாமல் இருந்த அமைச்சர் தொண்டாமுத்தூர் தாமோதரனும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர்களான கோகுல இந்திரா, எஸ்.பி.வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேளாண் அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி, கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சராக கோகுல இந்திரா நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூவருக்கும் இன்று மாலை ஆளுநர் ரோசையா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம்
மேலும் நகராட்சி, ஊரக வளர்ச்சி அமைச்சரான கே.பி. முனுசாமிக்கு தற்போது தொழிலாளர் நலத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சராக இருந்த உதயகுமாருக்கு வருவாய்த்துறை, கைத்தறித்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுந்தரராஜுக்கு விளையாட்டு இளைஞர் நலன் துறை என சிறிய அளவிலான இலாகா மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications