3 பேரைக் காவு வாங்கிய 2 விபத்துகள் - காரணம் லாரியும், பைக்கும், அதிக வேகமும்!
சென்னை: தமிழகத்தின் இருவேறு இடங்களில் இன்று பைக் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்துக்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் கோபி. இவர், பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த கோபி, நேற்று முன்தினம் பல்லாவரத்தில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் சென்றார்.
குமணன்சாவடி, குன்றத்தூர் சாலையில் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக கோபியின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோபி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதே போன்று நாமக்கல்லில் பைக் மீது மணல் லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கூலித்தொழிலாளிகள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை நைனாமலை அடுத்த பள்ளிப்புதூரை சேர்ந்த தொழிலாளர்கள் கோபு மற்றும் சக்திவேல்,. அதேபோல், நைனாமலை அடிவாரத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். அவர், அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை, 5 மணிக்கு, கோபு, சக்திவேல், தர்மலிங்கம் ஆகிய மூன்று பேரும், ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் ஊர் திரும்பினர். பைக்கை கோபு ஓட்டிச் சென்றார். புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில் இருந்து திரும்பி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, எதிரே மணல் லோடு ஏற்றி வந்த லாரி, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கோபு, சக்திவேல் ஆகியோர் மீது லாரி ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த தர்மலிங்கத்தை அருகில் இருந்தவர் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துமனையில் அனுமதித்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மணல் லாரி மற்றும் டிரைவரை சிறைபிடித்தனர்.
அப்போது அவ்வழியாக சென்ற ஆர்.டி.ஓ கண்ணன், பொதுமக்களை சமரசம் செய்தார். தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சிறைபிடிக்கப்பட்டிருந்த டிரைவரையும், லாரியையும் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications