தகாத உறவை கண்டித்த மனைவி.. முதலைக் கண்ணீர் வடித்து நாடகமாடிய கணவர்! கதிகலங்கிய கள்ளக்குறிச்சி!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய கணவர் மற்றும் கள்ளக்காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைஅருகே பா.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர், அரசு மருத்துவமனையில் கட்டு போடும் ஊழியராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி அம்சலேகா. இவர்களுக்கு இரண்டரை வயதில் நெகில் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக மனம் உடைந்த அம்சலேகா, வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் புடவையால் தூக்கு போட்டு இறந்துள்ளார் என போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து வந்த திருநாவலூர் போலீசார், அம்சலேகாவின் உடலை கைப்பற்றி, உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்.. ஒரு வருடம் சிறையிலேயே இருங்க.. 4 பேர் மீது குண்டாஸ்.. கலெக்டர் அதிரடி
சாவில் சந்தேகம் - தந்தை புகார்
இதனிடையே தனது மகள் அம்சலேகாவின் உடம்பில் காயங்கள் இருப்பதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரது தந்தை, திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், இது சம்பந்தமாக அம்சலேகாவின் கணவன் பாபு மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
கணவர் தகாத உறவு
போலீசார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணிடம் பாபு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், அதை மனைவி அம்சலேகா கண்டித்துள்ளதும் தெரியவந்தது. மேலும், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கணவரிடம் தினமும் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. எனினும், கள்ளத்தொடர்பை பாபு கைவிட மறுத்ததால், மனைவி அம்சலேகா கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தனது தாய் வீடான குன்னத்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
மனைவியிடம் உறுதி
இதனையடுத்து, மகாலஷ்மியுடன் உள்ள தொடர்பை நிறுத்திக் கொள்வதாக உறுதியளித்து, தனது மனைவி அம்சலேகாவை பாபு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். கணவரின் பேச்சை நம்பி கடந்த 10 நாட்களுக்கு முன்பு அம்சலேகா தனது கணவரின் ஊரான பா.கிள்ளனூர் கிராமத்துக்கு வந்துள்ளார்.
அப்போது, அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள், உனது கணவர் பாபு, மகாலட்சுமியுடன் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதாகவும், தாய்வீட்டிற்கு சென்றிருந்தபோது இருவரும் அடிக்கடி சந்தித்ததாகவும் அம்சலேகாவிடம் கூறியதாக தெரிகிறது. இதனால், அம்சலேகாவுக்கும், கணவர் பாபுவிற்ககும் வழக்கம்போல் இரவு நேரங்களில் சண்டை ஏற்பட்டது.
மனைவி கொலை
இந்நிலையில், சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினம், மது போதையில் வந்த பாபுவிடம், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி மனைவி அம்சலேகா சண்டையிட்டுள்ளார். இதனால் மது போதையில் இருந்த பாபுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் மனைவி அம்சலேகாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த அம்சலேகாவை, பாபு மற்றும் சகோதரியின் கணவர் ரவி கார்த்திக் என்பவரும் இணைந்து, கழுத்தை புடவையால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.
தற்கொலை நாடகம்
பின்னர், கள்ளக்காதலியான மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் ராஜீவ் காந்தியையும் உதவிக்கு அழைத்து வந்து, நால்வரும் சேர்ந்து கொலை செய்யப்பட்ட அம்சலேகாவின் உடலை, வீட்டிற்கு பின்புறமாக உள்ள ஒரு வேப்ப மரத்தில், அவரது புடவையால் தூக்கு மாட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் செட் செய்துள்ளனர். பின்னர், ஒன்றும் தெரியாததுபோல் வீட்டிற்கு வந்ததும், போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
வழக்கு - கைது
இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, கணவர் பாபு, ராஜீவ் காந்தி, மகாலட்சுமி ஆகிய மூவரை திருநாவலூர் போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான ரவி கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதலை கைவிடமாறு கூறிய மனைவியை, கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர், கள்ளக்காதலி உள்ளிட்ட கும்பலை, போலீசார் கைது செய்த சம்பவம், பா.கிள்ளனூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.