3 பேரை கொன்ற புலி: துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி பிடிக்க நடவடிக்கை
உதகமண்டலம்: உதகமண்டலம் அருகே கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து மூன்று பேரை புலி கொன்றுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி மூலம் மயக்கமருந்து செலுத்தி புலியைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருகேயுள்ள சோலடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்ற இளம்பெண் கடந்த 4ம் தேதி கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை புதருக்குள் பதுங்கியிருந்த புலி தாக்கி கொன்றது.
இதேபோல வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சின்னப்பன் என்ற தொழிலாளியும் புலியின் அடித்துக் கொன்று தின்றது.
இந்த நிலையில் ஊட்டி அருகேயுள்ள தூனேரி கிராமத்துக்குள் புகுந்த புலி ராமுகுட்டி என்பவரின் வீட்டின் பின்பக்கம் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தாக்கிவிட்டு ஓடிவிட்டது.
மூன்றாவது பலி
புதனன்று மாலை ஊட்டி அருகேயுள்ள குந்தசப்பை என்ற இடத்தில் உள்ள காலிபிளவர் தோட்டத்தில் எவிபிரகாஷ், அவரது மனைவி முத்துலட்சுமி(36), மகன் ராஜசிங்கம் ஆகியோர் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த புலி பாய்ந்து வந்து முத்துலட்சுமியை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
முத்துலட்சுமியின் உடலை அந்த புலி இழுத்துச்செல்ல முயன்றது. அதிர்ச்சி அடைந்த ராஜசிங்கம் சத்தம் போட்டு புலியை விரட்டி விட்டு தாயின் உடலை மீட்டார்.
3 பேர் பலி
4 நாட்களுக்குள் 3 பேரின் உயிரை புலி காவு வாங்கிய சம்பவம் சோலடா, அட்டபெட்டு, குந்தசப்பை மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. புலி தாக்கி இறந்த முத்துலட்சுமியின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஆகும். கடந்த 10 ஆண்டாக இங்கு வசித்து வந்தனர்.
புலி தாக்கி முத்துலட்சுமி இறந்த தகவல் அறிந்ததும் கலெக்டர் சங்கர் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். புலியின் கொட்டத்துக்கு முடிவு கட்டவில்லை என்றால் அனைத்து கிராம மக்களும் இணைந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர்.
புலி வேட்டை
இதனையடுத்து பொதுமக்களின் உயிருக்கு உலைவைத்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினரும், கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினரும் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.
புலியின் உடலில் மயக்க மருந்து செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் துப்பாக்கி ஏந்திய நிலையில் தயாராக உள்னர்.
போலீசார் குவிப்பு
புலி தொடர்ந்து மனிதர்களை வேட்டையாடி வருவதால் ஊட்டி அருகேயுள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் அச்சமும்-பீதியும் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற அசாதரண சூழ்நிலை உள்ளது. பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
புலி நடமாட்டம் உள்ள கிராமங்கள் தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்லும் வழியில் உள்ளன. தொட்டபெட்டா பகுதிக்கும் அந்த புலி இடம் பெயர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு நிவாரணம்
இதனிடையே புலி தாக்கி உயிரிழந்த முத்துலட்சுமி என்ற பெண்ணின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வனத்துறை மூலம் இந்தத் தொகை உடனடியாக வழங்கப்படும் என்று கூறியுள்ள முதல்வர், உயிரிழந்த முதல்வர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.