பழனி முருகன் கோவில் உள்ளே மது அருந்திய காவலர்கள் டிஸ்மிஸ்: வலம் வரும் வீடியோ
பழனி: பழனி முருகன் கோவிலின் உள்ளே பொதுமக்கள் தங்கி செல்லும் மண்டபத்தில் மது அருந்திய மூன்று இரவு நேர காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவில் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பழனி முருகன் கோவிலில் உள்ள ராஜகோபுரம் பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பழனி மலையில் உள்ள பக்தர்கள் தங்கிச் செல்லும் மங்கம்மா மண்டபத்தில், 3 இரவு நேர காவலர்கள், மது அருந்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப்களில் வலம் வருகிறது.
பழனி மலை முருகன் கோவிலில் 200க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் பணிபுரிந்து வருகின்றனர். பழனி மலைப்பாதையில் உள்ள மங்கம்மாள் மண்டபத்தில், இரவு நேரத்தில் காவலர்கள் மது அருந்திவிட்டு, அசைவம் சாப்பிடும் வீடியோ பக்தர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தலங்களில் தற்போது வெளியாகவே இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலை பாதுகாக்க வேண்டிய காவலர்களே, தவறான செயலில் ஈடுபட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுபோன்று கோவில் புனிதத்திற்கு களங்கம் விளைவிப்பவர்களை, கடுமையாக தண்டித்தால் மட்டுமே ஆகம விதிகள் காக்கப்படும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் மது அருந்திய காவலர்கள் மூன்று பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கோவில் நிர்வாகம், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications