சட்டவிரோத தொலைபேசி வழக்கு: சன் டி.வி. ஊழியர்கள் மூவரின் ஜாமீன் மனு நிராகரிப்பு!!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சன் டி.வி. ஊழியர்கள் மூவரது ஜாமீன் மனுவை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, 323 பிராட்பேண்ட் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் டி.வி.க்கு வழங்கியதாக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் பொது மேலா ளராக இருந்த கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளராக இருந்த எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த மூவரையும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதனை நேற்று சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் சன் டி.வி. ஊழியர்கள் மூவரும் தாக்கல் ஜாமீன் மனுவையும் விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்றம் அதனையும் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications