தாம்பரம் அருகே லாரி மீது வேன் மோதி 3 பெண்கள் பலி - ஐவர் படுகாயம்
தாம்பரம் அருகே அனகாபுத்தூர் மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியாகினர்.ஐவர் படுகாயமடைந்தனர்.
சென்னை: தாம்பரம் அருகே அனகாபுத்தூர் மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது டாடா ஏஸ் வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியாகினர். ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த பெண்களின் பெயர் சுஜாதா,45, வசந்தி,40, தமிழ்,38 என்பதாகும். இவர் ரத்தினமங்கலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பூ விற்பனைக்காக லோடு வேனில் 12 பேர் சென்று கொண்டிருந்தனர். தாம்பரம் - மதுரவாயில் பைபாஸ் சாலையில் அனகாபுத்தூர் மேம்பாலம் அருகே சென்ற போது அந்த சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதியது.
மோதிய வேகத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த பெண்கள் விபத்தில் சிக்கினர்.
சம்பவ இடத்திலலேயே இரண்டு பெண்களும், மருத்துவமனையில் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரி, அமுல் உட்பட 3 பேர் தலையில் காயமடைந்ததால் சென்னை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த சாலையில் மின் விளக்குகள் கிடையாததால், தெரியாமல் சென்று வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு பணியில் உடனடியாக போலீசார் வரவில்லை, அதனாலேயே உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியாததே உயிரிழப்புக்கு காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.