11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் சேதமாகிப் போன 30 அப்பாவி வீடுகள்!
சென்னை: மவுலிவாக்கத்தில் 11 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள 30 வீடுகள் சேதமடைந்துள்ளது.
இந்த வீடுகளில் பல பெருமளவில் சேதமடைந்து போயுள்ளன. இதனால் அந்த வீடுகளில் இருக்கும் பொருட்களைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு இடிபாடுகள் கிடக்கின்றன.
இந்த வீடுகளில் வசித்து வந்தோர் தற்போது உறவுக்காரர்கள் வீடுகளிலும், நண்பர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் பல வீடுகள் மோசமான நிலையில் இருப்பதால் அங்கு தங்க வேண்டாம் என்று அதில் இருப்போரை போலீஸார் எச்சரித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கட்டடம் இடிந்து விழுந்து விபத்து எற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் 4-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் மீட்பு பணியில் சற்று சிக்கல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது.
இதையடுத்து தாம்பரம், முடிச்சூர், மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து துப்புறவுத் தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு, மழைநீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்துகள் உள்ளிட்டவை அடித்த வண்ணம் உள்ளனர்.