பாட்னா குண்டு வெடிப்பு: குமரியில் 31 பஸ்கள் உடைப்பு 8 பேர் கைது

பீகார் மாநிலம் பாட்னா வில் நேற்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய பொதுக் கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 6 பேர் பலியாயினர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குண்டுவெடிப்பு குறித்து தகவல்கள் வெளியான அடுத்த சில நிமிடங்களில் குமரி மாவட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. அரசு பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன.
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு அருகே வரிசையாக 3 பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற அரசு விரைவு பஸ் ஒன்று கல் வீசி தாக்கப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 31 அரசு பஸ்கள் கல் வீசி உடைக்கப்பட்டன.
சுமார் 1 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்த கல்வீச்சு சம்பவத்தில் 5 அரசு பேருந்து டிரைவர்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பஸ் டிரைவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கற்கள் வீசப்பட்டதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலீசார் தலையிட்டு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி பேருந்துகளை இயக்கச் செய்தனர்.
மாவட்டம் முழுவதும் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லை மற்றும் திருவனந்தபுரம் சென்ற பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இரவு நேரத்தில் கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இரவு 8 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படாததால் கிராமப் புறமக்கள் பெரும் அவதிப்பட்டனர். அவர்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தநிலை இன்று காலை வரை நீடித்தது. காலை 7 மணிக்கு மேல்தான் கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
திடீர் வன்முறை குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் குமரி மாவட்டம் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்த அவர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி பஸ் உடைப்பு தொடர்பாக 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பஸ் உடைப்பில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications