புதுச்சேரியில் பயங்கரம்... 33 வயதுப் பெண் நடு ரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலை
புதுச்சேரி: புதுவையில் மேலும் ஒரு பரபரப்புக் கொலை நடந்துள்ளது. டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சத்யப்பிரியா என்ற 33 வயதுப் பெண் நடு ரோட்டில்வைத்து சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகளும், மக்களும் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்தப் பெண் படுகொலை ரங்கசாமி அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் சத்யப்பிரியா (33). இவர் புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் அமலன் என்கிற லூர்துநாதன் (28) என்பவருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சத்யப்பிரியா நேற்று மாலை 6.30 மணியளவில் வேலையை முடிந்து வீட்டிற்கு தனது ஸ்கூட்டியில் புறப்பட்டார்.
சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பதுங்கி இருந்த லூர்துநாதன் திடீரென்று அரிவாளுடன் பாய்ந்து வந்து சத்யப்பிரியாவை வழி மறித்தார். பின்னர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சத்யப்பிரியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சத்யப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சத்யப்பிரியா பரிதாபமாக இறந்தார்.
லூர்துநாதன் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார். ஆனால் அந்த பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து லூர்துநாதனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications