பழைய குற்றால அருவியில் சோகம்: குழாயில் சிக்கி 3 வயது குழந்தை பலி
தென்காசி: பழைய குற்றாலத்தில் பெற்றோருடன் குளித்த 3 வயது பெண் குழந்தை அருவிப்பகுதியில் உள்ள குழாயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நாகப்பட்டினத்தை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை அருவிப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. அருவியில் குளித்து கொண்டிருந்த பெற்றோர் குழந்தையை கவனிக்க தவறியதால், குழந்தை தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு, நீர் வழிந்தோடும் குழாய் பகுதியில் சிக்கி கொண்டது. சற்று நேரம் கழித்து குழந்தையை காணாமல் பெற்றோர் அங்குமிங்கும் பதறியடித்து தேடினர்.
சிறிது நேரம் கழித்து குழாயில் குழுந்தையின் சட்டை சிக்கியிருந்தது தெரிந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அது இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications