இவர்களை என்னதான் செய்வது.. மீன் பிடிக்க போனாலே கைது செய்யும் இலங்கை கடற்படை.. இன்றும் 4 பேர் கைது
கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரத்தில் வசித்து வருகிறார் கார்த்திகேயன். அவருக்கு சொந்தமான விசைப் படகில் முனியசாமி, முனுசாமி, ராமர், ராஜேந்திரன் ஆகிய 4 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் பிடித்த மீன்களை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், மீனவர்கள் 4 பேரையும் காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் இன்று இந்த 4 மீனவர்களும் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். இலங்கை நீதிமன்றம் உத்தரவு அளித்த பிறகுதான் இவர்கள் வீட்டிற்கு திரும்புவார்களா அல்லது சிறையில் போடப்படுவார்களா என்பது தெரிய வரும்.
அவர்களுடன் வேறு படகுகளில் சென்ற மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். அவர்கள் ஊருக்குள் வந்து தகவல் சொன்ன பிறகே 4 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது அவர்களது உறவினர்களுக்கு தெரிய வந்தது.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள், கச்சத் தீவு அருகே மீன் பிடித்தார்கள், நெடுஞ்தீவு அருகே மீன் பிடித்தார்கள் என ஏதாவது ஒரு காரணம் சொல்லி இலங்கை கடற்படையினர் கைது செய்துவது வாடிக்கையாகிவிட்டது. மீனவர்களின் படகுகள், மீன்கள் பறிமுதல் செய்வது, கல்லெறிந்து விரட்டுவது என ஏதாவது ஒரு வகையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.
இதனால் ராமேஸ்வர மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாகி வருகிறது. இந்தப் பிரச்சனையில் இருந்து தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றக் குற்றச்சாட்டை தொடர்ந்து ராமேஸ்வர மீனவர்கள் எழுப்பி வருகின்றனர்.
மேலும், மீனவர்கள் தொடர்பான இருநாட்டு பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.