தருமபுரி அருகே பயங்கரம்.. கைகள், கண்கள் ஒன்றாக கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் மிதந்த 4 சடலங்கள்
கிணற்றிலிருந்து ஒரே குடும்பத்தின் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தருமபுரி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் கிணற்றினுள் கல்லால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரிமங்கலம் அடுத்து உள்ள கிராமம் சவுளுகொட்டாய். இங்கு வசித்து வருபவர் லோகநாதன். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 12 வயதான மூத்த மகன் சஞ்சய்க்கு கால்கள் நடக்க முடியாத நிலை.

மகனின் உதவிதொகை
லோகநாதன் கிரானைட் தொழில் செய்து வருபவர். ஆனாலும் சரியாக வேலைக்கு போகாத காரணத்தினாலும், குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தினாலும் கணவன்-மனைவியே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தன் மகனுக்கு வழங்கப்படும் அரசு உதவித்தொகை பணத்தை கேட்டு மனைவியை அடித்து பிடுங்கி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

4 பேர் மாயம்
கடந்த வியாழக்கிழமையும் தம்பதி இடையே சண்டை சண்டை ஏற்பட்டதால் மனமுடைந்த நதியா, தன் மகன்கள் 3 பேரையும் அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனால் அங்கிருந்து அன்று மாலையே மீண்டும் பிள்ளைகளை அழைத்து கொண்டு திரும்பி வந்துவிட்டார். ஆனால் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதனால் குடும்பத்தார் பல இடங்களில் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை என்பதால் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.

உடல்கள் மிதந்தன
இந்நிலையில், லோகநாதனுக்கு சொந்தமான விவசாய கிணறு ஒன்று உள்ளது. 40 அடி ஆழமள்ள இந்த கிணற்றில் இன்று காலை 2 சிறுவர்களின் உடல்கள் மிதந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு புகார் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 சிறுவர்களின் வாய், கண் ஒன்றாக கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர். இதையடுத்து மீண்டும் அதே கிணற்றில் தேடி பார்த்தபோது நதியா மற்றும் இன்னொரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இவர்களது உடலும் ஒன்றாக கல்லுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

லோகநாதன் குடும்பத்தார்
4 பேரும் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். லோகநாதனிடம், அவரது குடும்பத்தார் மீதும் சந்தேகம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையிலும் போலீசார் லோகநாதனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் லோகநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து கொன்று கல்லைக் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications