திருத்தணியில் கடத்தப்பட்ட பள்ளிச்சிறுமி ஆந்திராவில் மீட்பு... 2 பேர் கைது
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடத்தப்பட்ட 4 வயது பள்ளிச் சிறுமியை ஆந்திரா மாநிலம் நகரியில் தனிப்படை போலீசார் மீட்டனர். சிறுமி கடத்தல் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருத்தணி, சித்தூர் சாலை கலைஞர்நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் திருக்குமரன். சென்னையில் உள்ள தனியார் செல்போன் நெட்வொர்க்கில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பபிதா. இவர்களுடைய ஒரே மகள் ஹன்சிகா (வயது4). திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள்.
திங்கட்கிழமையன்று மாலை ஹன்சிகா பள்ளிக்கூட பேருந்தில் இருந்து வீட்டின் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாள். அவளை அழைத்து செல்வதற்காக தாத்தா சீனிவாசன் வந்து இருந்தார். புத்தக பையை வாங்கிக் கொண்டு அவர் முன்னால் சென்றார்.
பின்னால் சிறிது தூரத்தில் ஹன்சிகா மற்ற சிறுமிகளுடன் விளை யாடியபடியே வந்தாள். அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர் திடீரென ஹன்சிகாவின் வாயை பொத்தி தூக்கிக்கொண்டு அருகில் தயாராக மோட்டார் சைக்கிளில் நின்ற கூட்டாளியுடன் தப்பி சென்று விட்டான்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் கூச்சலிட்டார். இதற்குள் மர்ம ஆசாமிகள் சிறுமி ஹன்சிகாவுடன் மறைந்து விட்டானர். இச்சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகள் கடத்தப்பட்டது தெரிந்ததும் திருக்குமரனும், பபிதாவும் கதறி அழுதனர்.
இது குறித்து சீனிவாசன் திருத்தணி போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு மணியழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிகாமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி ஹன்சிகா கடத்தப்பட்ட பின்பு பெற்றோரிடமோ அல்லது உறவினரிடமோ கடத்தல் கும்பல் எந்த கோரிக்கை விடுத்தும் பேசவில்லை. இதனால் சிறுமியை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள். என்ற விவரம் தெரியாமல் போலீசார் குழப்பத்தில் இருந்தனர்.
கடத்தல் கும்பல் சிறுமியுடன் சித்தூர் சாலையில் சென்றதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர். எனவே ஆந்திராவை சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பல் ஹன்சிகாவை தூக்கி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் திருத்தணி அருகே நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஆந்திரா விரைந்த தனிப்படை போலீசார், நகரி அருகே சிறுமி ஹன்சிகாவை மீட்டனர். குழந்தையை கடத்தியது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications