நல்லநேரம் போகுதேப்பா... அரக்க பரக்க வேட்புமனு தாக்கல் செய்த அதிமுகவினர்
சென்னை: ஜோதிடர் குறித்துக்கொடுத்த நல்ல நேரத்தில் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தங்களின் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
முதல்வர் ஜெயலலிதா எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், ஜோதிடர்களின் ஆலோசனை படி செய்வார். எந்தக் காரியத்தை தொடங்க வேண்டுமானாலும், நல்ல நாள், நல்ல நேரம் அல்லது 5, 7, 9 உள்ளிட்ட எண்கள் வரும்படி பார்த்துக் கொள்வார்.
முதல்வர் ஜெயலலிதா தனது பிரசாரத்தைக் கூட கோயில் நகரான காஞ்சிபுரத்தில் மார்ச் 3ம் தேதிதான் தொடங்கினார். மேலும், அதிமுக வேட்பாளர்கள் அனைவரையும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளார் என்கிறது அதிமுக வட்டாரம்.

கேரளா ஜோதிடர் ஆலோசனை
கேரள பணிக்கரின் ஆலோசனையின்படியே, அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுவை நேற்று ஒரே நாளில் மனு தாக்கல் செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் ஏப்ரல் 1ம் தேதி மனு தாக்கல் செய்தால் பெரும்பாலான தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று கூறியதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 வேட்பாளர்களும்
அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தலின் பேரில் நேற்று பிற்பகலில் ஒரே சமயத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். மதியம் 1.40 மணி முதல் மாலை 3 மணிக்குள் இவர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூர் பரசுராமன்
தஞ்சாவூரில் அ.தி.மு.க வேட்பாளர் கு.பரசுராமன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்.கழக விவசாயப்பிரிவு தலைவர் துரை.கோவிந்தராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குழ.செல்லையா,தஞ்சை மாவட்ட மாணவரணி செயலாளர்,மாவட்ட பால்வளம் பெருந்தலைவர் காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னை வேட்பாளர்கள்
தென் சென்னை அ.தி.மு.க வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், மத்திய சென்னை வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்,
வடசென்னை அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மத்திய சென்னை பாராளமன்ற வேட்பாளர் எஸ் ஆர் விஜயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்

மரகதம் குமரவேல்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளரான மரகதம் குமரவேல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் கே.என். ராமச்சந்திரன் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இடைத்தேர்தல் வேட்புமனு
இதேபோல் ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமனும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருப்பூர் சத்யபாமா
திருப்பூர் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திருப்பூர் தொகுதி பொறுப்பாளர்களான வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி ஆகியோர் முன்னிலையில் ஆயிரத்துக்கும் அதிகமான நிர்வாகிகளும், தொண்டர்களும் திருப்பூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் கூடினர்.அவர்கள் தாரை தப்பட்டை முழங்க எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சரை விட மறுத்த போலீஸ்
வேட்புமனு தாக்கல் செய்த சத்யபாமா சென்ற போது கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தை போலீசார் விட மறுத்தனர். பின்னர் அறையில் இருந்து ஒருவரை வெளியே வரச்சொல்லிவிட்டு தோப்பு வெங்கடாசலம் வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்குச் சென்றார்.
நெல்லை மாவட்ட வருவாய் ஆட்சியரிடம் அதிமுக தென்காசி வேட்பாளர் வதந்தி முருகேசன், ,காங்கிரஸ் நெல்லைவேட்பாளர் ராமசுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரனிடமும் வேட்புமனுவைத்தாக்கள் செய்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை தொகுதி கழக வேட்பாளர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டாஜிவேட்பு மனுதாக்கல் செய்தார்.

திருச்சியில் வேட்புமனு
திருச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் .ப.குமார் கட்சி பிரமுகர்களோடு இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திமுக வேட்பாளர் அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிமுக நேரத்தில் மதிமுக
இதற்கிடையே அதிமுக மாவட்ட செயலாளரும், செய்தித்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிமுக வேட்பாளர் சிவகாசி முன்னாள் யூனியன் சேர்மன் ராதாகிருஷ்ணனை தனது ஆதரவாளர்களுடன் அழைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்தார். அப்போது விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த மதிமுகவினர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது வாகனங்கள் மீது கை வைத்து தட்டி எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.

அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏற்கனவே கூடியிருந்த அதிமுகவினர், பதிலுக்கு சத்தம் போட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேறு இடத்தில் காத்திருக்க வைத்தனர்.
வைகோ வேட்பு மனு தாக்கல் செய்த வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்து விட்டு கிளம்பி சென்றார். இதற்கு பிறகு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலெக்டர் ஹரிகரனின் அறைக்குள் சென்று அவரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.












Click it and Unblock the Notifications