எல்லை தாண்டி வந்தால் இனி படகுகள் கிடையாது... இலங்கை எச்சரிக்கை- ஊர் திரும்பிய 45 மீனவர்கள் தகவல்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 45 தமிழக மீனவர்கள் மண்டபம் வந்து சேர்ந்தனர். இவர்கள் பல்வேறு துறை அதிகாாிகளின் விசாரணைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நேரிட்டால், படகுகளை விடுவிக்காத வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர இலங்கை அரசு முயற்சித்து வருவதாக நாடு திரும்பிய ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 106 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க அந்நாட்டு அரசு பரிந்துரை செய்ததை அடுத்து, நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
இலங்கையில் 50 நாட்களுக்கும் மேலான சிறை தண்டனை அனுப்பவித்த பின்னர் நேற்றிரவு ஊர் திரும்பிய ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 45 பேர், இலங்கை அரசு படகுகளை விடுவிக்காத வகையில் சட்டம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும், மீனவர்கள் பத்திரமாக ஊர் திரும்பியதை அடுத்து அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.